''கர்நாடக மாநிலம் முழுக்கவே பல்வேறு சிற்பக்கலைகள், குகைகள் கொண்ட கோவில்கள் மிக அதிகம். இதில் சாளுக்கிய மன்னர்களின் ராஜ்யத்தின் தலைநகரமான பாதாமி, பட்டாடக்கல்லு, அய்ஹோலே போன்ற ஊர்கள் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. இவை அனைத்தும் 5 முதல் 8ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை.
பாதாமி (பதாமி)
முதலில் நாங்கள் சென்றது பாதாமி (பதாமி). திராவிடர் கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட குகை கோவில்கள் கொண்ட நகரம். இந்த சிறு நகரம் முழுக்க பாதாம் நிறத்தில் கரடுமுரடான sandstone பாறைகள் நிறைந்து இருப்பதால் இந்த ஊருக்கு பாதாமி என்று பெயர் வந்ததாக கூறுகிறார்கள். பதாமி என்றும் கூறுகிறார்கள்.
இந்த குகை கோவில் சிற்பங்கள், சாளுக்கிய மன்னன், புலிகேசி-1 கி.பி.543ஆம் ஆண்டு பாதாமிக்கு தலைநகரத்தை மாற்றியபோது அமைக்கப்பட்டுள்ளன. இந்த குகை கோவில்களை அவர்கள் உருவாக்கியது, இயற்கையாகவே தென்னகத்தில் இருந்து படை எடுத்து வந்த பல்லவ நாட்டு எதிரிகளிடம் இருந்து காத்து கொள்ள அமைந்தது சிறப்பாகும்.
கீழே ஒரு அகஸ்தியர் தீர்த்தக்குளமும், அதில் பழங்கால புத்தநாதர் கோவிலும் அமைந்திருக்கின்றன. இதை மேலிருந்து பார்த்தால், பச்சை நிற குளத்தில் இருப்பது மிக அழகாக இருக்கின்றது. குகைக்கு மேலே 18ஆம் நூற்றாண்டுகளில் திப்பு சுல்தான் அமைத்த கோட்டை இருக்கின்றது.
பட்டாடக்கல்லு
இது பதாமியிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. பட்டாபிஷேக கல் என்பதையே பட்டாடக்கல்லு என்றழைக்கப்படுகின்றது. இங்கே தான் அரசர்களுக்கு பட்டாபிஷேகம், முடி சூட்டு விழா நடந்திருப்பதால் இந்த பெயர் அமைந்ததாக கூறுகிறார்கள்.
இந்த இடம் பதாமியை விட வேறுபட்டு அமைந்திருந்தது. ஒரு பக்கம் நமது கோவில் கோபுரங்களை போலவும், மறு பக்கம் ஒரிசாவில் உள்ள கோவில்களை போலவும் ஒரு சேர அமைந்திருந்தது மிக அழகாக இருந்தது. உறுதியான தூண்களும், அதில் அமைந்திருக்கின்ற சிற்பங்கள் ராமாயண, மகாபாரத புராணங்களை எடுத்துரைப்பதாக இருக்கிறது.
இந்த கோவிலுக்கு முன்னே மிகப்பெரிய நந்தி சிலை ஒன்று கருப்பு கிரானைட் கல்லில் உள்ளது. பல படையெடுப்புகள், கொள்ளைகளுக்கு பிறகு இன்னமும் பளபளப்பாக அழகாக இருப்பது இந்த நந்தி சிலையின் சிறப்பு. இவற்றை பார்க்கும் போது, அந்தக்காலங்களில் கலையும், மூர்க்கத்தனங்களும் ஒரு சேர அமைந்திருப்பதை சிற்பங்களின் மூலம் அறியலாம்.
இது பட்டாடக்கல்லிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது சாலுக்கிய மன்னர்களின் முதல் தலைநகரமாகும். அதற்கு சான்றாக இந்த ஊரை சுற்றியும் 100க்கும் மேற்பட்ட கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
இங்குள்ள 100 கோவில்களையும் பார்க்க முடியாது என்பதால் முக்கியமான துர்கா கோவிலை மட்டும் பார்க்க சென்றோம். இந்த கோவில் சிறியதாக இருந்தாலும், இதன் வடிவம் அரை வட்ட வடிவமாக (semi circular shape) இருந்தது அழகு. இந்த கோவிலில் உள்ளே கற்கலாலேயே மேல் தூண்களும், மேல் சுவற்றில் உள்ள கற்சிற்பங்களும் அழகு.
இந்த ஊர்களுக்கு செல்லும் போது பதாமியில் மட்டுமே தங்க முடியும். மற்ற இரண்டு ஊர்களில் எந்த வசதியும் இல்லை. உணவகங்கள் கூட பதாமியில் மட்டும் தான் உள்ளது. விடுதிகளை பொறுத்தவரையில் இரண்டு மூன்று இருக்கின்றன. ஒரு சில பெரிய ஹோட்டல்களும் இருக்கின்றன. இங்கே கொசுக்களை விட கோவில்களே அதிகம்.''
ஆன்மிகத்தோடு சேர்ந்த சுற்றுலா ஆரோக்கியமானது. பாதாமி போன்ற நகரங்கள் இந்தியாவில் எத்தனையோ இருக்கிறது. அங்குள்ள நம் முன்னோர்களின் கட்டடக்கலையை இதுபோன்ற ஆன்மிக சுற்றுலாவால் வளர்ப்பது நமது கடமை.
-இ.லோகேஷ்வரி
-விகடன்-
ஈ ரோட்டைச் சேர்ந்த சுரேஷ்பாபு மற்றும் சரவணமூர்த்தி ஆகியோர் கர்நாடக மாநிலத்தில் உள்ள 6ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட குகைகள், கோவில்கள் அத...
Post a Comment